Tamilnadu

குடும்பத்தோடு சாப்பிட்ட 12 வயது சிறுமி பரிதாப பலி - தந்தை, 2 மகள்களுக்கு தீவிர சிகிச்சை : போலிஸ் விசாரணை!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (45) இவரது மனைவி மாலதி (32) இவர்களுக்கு ஜோதிகா, பூமிகா, காமாட்சி என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த வாரம் புதன் கிழமை காமராஜ் தனது குடும்பத்தினருடன் சம்மந்திகுப்பம் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டில் திருவிழாவிற்காக சென்று அன்றே இரவே வீடு திரும்பியுள்ளார்.

அப்பொழுது மாமியார் வீட்டிலிருந்து விளக்குமாவு, பொரி உள்ளிட்ட திண்பண்டங்களை மாலதி தனது வீட்டிற்கு எடுத்து வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை, மாலதி கொண்டு வந்த திண்பண்டங்கள் மற்றும் மாலதி வீட்டில் சமைத்து வைத்திருந்த பண்ணை கீரை குழம்பு உணவினை மூன்று பெண் குழந்தைகளும் ஒன்றாக உணவு உட்க்கொண்டுள்ளனர்.

அன்று இரவு மாலதியை தவிர வீட்டிலிருந்து அனைவரும் திண்பண்டங்கள் மற்றும் இரவு உணவை உட்க்கொண்ட நிலையே அன்று இரவே மாலதியின் இளைய மகளான காமாட்சியிற்கு தீவிர வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நேற்று முழுவதும் காமராஜ் மற்றும் மூன்று பெண் குழந்தைகளுக்கும் தீவிர வயிற்று போக்கு ஏற்பட்ட நிலையில், இன்று அதிகாலை காமராஜ் மற்றும் ஜோதிகா, பூமிகா, காமாட்சி ஆகியோர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் ஈடுப்பட்டிருந்த போது காமாட்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் ஜோதிகா மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், காமராஜ் மற்றும் பூமிகா ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Also Read: 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : டியூசன் ஆசிரியை அவரது காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!