Tamilnadu
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: social media-ல் சர்ச்சை கருத்து.. அவதூறு பரப்பிய அதிமுக நிர்வாகிகள் கைது
கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி விடுதியில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் தொடர்பாக ஏற்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது.
இதில் போராட்டக்காரர்கள் பள்ளிக்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் வாகனங்கள் மற்றும் பள்ளிக்குள் இருந்த பள்ளிக்குச் சொந்தமான பேருந்துகள் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களையும் அடித்து சேதப்படுத்தி தீ வைத்து எரித்தனர்.
இதனால் அப்பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது. இதனை அடுத்து தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் அப்பகுதியில் ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி சுட்டும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கனியாமூர் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார், பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், மற்றும் வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இவர்கள் 5 பேரையும் கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி முன்பு போலிஸார் நேற்று இரவு ஆஜர் படுத்தினர். இதனையடுத்து பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரையும் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி இரண்டாம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலை தளத்தில் பதிவிட்ட பலரை தமிழக மெங்கிலும் போலிஸார் கைது செய்து வருகின்றனர். அந்தவகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் மாணவி மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட பெரம்பலூர் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த 8வது வார்டு செயலாளர் சூர்யா (24), பெரம்பலூர் அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் 9வது வார்டு செயலாளர் தீபக் (25) ஆகிய இருவரையும் போலிஸார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!