Tamilnadu

எடப்பாடிக்கு குழி பறிக்கும் வேலுமணி-தங்கமணி.. திருடன் முனுசாமி.. - வெளியானது பொன்னையன் பேசிய ஆடியோ !

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவிக்கப்பட்டது.

அதேவேளையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தை பழனிசாமி தரப்பினர் பூட்டியதால், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் தரப்பினர்அங்கு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்குதல் நடத்திக்கொண்டனர்.

அதன்பின்னர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அ.தி.மு.க தலைமை அலுவகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் எடப்பாடி மற்றும் முனிசாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார். தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறை அதிகரித்ததால், அங்கிருந்த பன்னீர்செல்வத்தை வெளியேற்றி அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பொன்னையன் பேசியதாகி தொலைபேசி உரையாடல் ஒன்றை லைபன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கே.எஸ்.கோலப்பனிடம் அ.தி.மு.க மூத்த உறுப்பினர் பொன்னையன், பேசியதாக வெளியான இந்த ஆடியோவில் "கே.பி.முனுசாமி. கொள்ளையடித்து கோடீஸ்வரனாக ஆடுகிறார். சாதி அடிப்படையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பிரிந்து கிடக்கின்றனர். மேற்கு மாவட்டங்களில் உள்ள எம்.எல்.ஏக்களை தங்கமணியும், வேலுமணியும் பணம் கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்கள்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சில எம்.எல்.ஏக்களை தங்கள் கையில் வைத்து இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவாக உள்ளார்கள். எம்.எல்.ஏக்கள் யாரும் அதிமுக தலைமைக்கு விசுவாசமாக இல்லை. கே.பி.முனுசாமியும் ஒற்றைத் தலைமைக்கு வர முயற்சி செய்தார். எடப்பாடி பழனிச்சாமி தமது தலைமையிலான ஆட்சி காலத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அடித்த கொள்ளைகளை கண்டுகொள்ளவில்லை" எனக் கூறியுள்ளார்.

இந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என்று பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தொழில்நுட்பம் மூலம் எனது ஆடியோ போல சித்தரித்து வெளியிட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். இந்த ஆடியோ அ.தி.மு.கவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "இந்தி மொழி மட்டும் இந்திய மொழி அல்ல" - 'Nothing' நிறுவனத்தை கண்டித்த தென்னிந்தியர்கள்.! பின்னணி என்ன?