Tamilnadu

அமைச்சருக்கு மரியாதை கொடுக்காமல் பட்டமளிப்பு விழா.. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு கண்டனம்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அனைத்து விதிகளும் மீறப்பட்டு பட்டமளிப்பு விழா நடத்தப்படுவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு செயலாளர் பேராசிரியர் முரளி தெரிவித்துள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு வெளியிட்டுள் அறிக்கை வருமாறு:-

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க.வை சேர்ந்த, ஒன்றிய இணை அமைச்சர் முருகனை தமிழக கவர்னர் அழைத்திருப்பது அரசியல் சார்பானது. தமிழக பல்கலைக்கழகங்களின் இணைவேந்தரான உயர்கல்வித் துறை அமைச்சருக்கு உரிய மரியாதை தராமல் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசிடம் இந்த விழா குறித்து ஆலோசனை நடத்த வில்லை என்பது கண்டிக்கத்தக்கது. பொதுவாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கல்வி மற்றும் கலை உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களை மட்டுமே பட்டமளிப்பு விழா பேரூரை வழங்க அழைக்கப்படுகின்றனர். தனியாக சிறப்பு விருந்தி னரை அழைப்பது வழக்கமில்லை.

இது குறித்து பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழுவுக்கு அதிகாரப் பூர்வ தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்த விதியும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மீறப்பட்டுள்ளது. அனைத்து விதிகளையும் மீறி, அரசியல் கட்சியினரை அழைப்பதும், கவர்னர் சொல்வது அனைத்தையும் பல்கலைக்கழக துணைவேந்தர் கேட்பதும் தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது போன்ற தவறான போக்குகளை கல்வியாளர்களும், தமிழக அரசும் அனுமதித்தால், உயர்கல்வி நிறுவனங்கள் அரசியல் கட் சிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்படும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: “L.முருகன் கல்வியாளரா? - ஆளுநர் அரசியலை புகுத்துகிறார்.. பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு”: அமைச்சர் அதிரடி!