Tamilnadu
காவல்துறை நடுநிலையோடு செயல்பட்டது.. பழனிச்சாமி கூட்டம் பாராட்ட வேண்டாம்; பழி சுமத்துவதை நிறுத்தட்டும்!
“அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் சமூக விரோதிகள் நுழையக் கூடும்எனக் காவல் துறையிடம் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தோம். இருந்தும் உரிய நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை மீது புகார் கூறியுள்ளார்.
இதிலே நமக்குப் புரியாத புதிர்; பழனிச்சாமி என்ன சொல்ல வருகிறார் என்பதுதான்! பழனிச்சாமி கோஷ்டியின் சார்பில் சமூக விரோதிகள் அ.தி.மு.க. அலுவலகத்தில் நுழையக் கூடும் என்பதுதான்!
ஆனால் ஜூலை 11 ஆம் தேதி காலை அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் நுழைந்தது ஓ.பன்னீர் செல்வம் கோஷ்டி. எடப்பாடி பார்வையில் ஓ.பன்னீர் செல்வம் சமூக விரோதியாகத் தெரியலாம்; ஆனால் காவல் துறைப்பார்வையில், அவர் ஒரு முன்னாள் துணை முதல்வர் மட்டுமல்ல; எடப்பாடி போல முதலமைச்சராக சில காலம் இருந்தவர்.
அதுமட்டுமல்ல; அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் அவர் வந்த காலக்கட்டத்தில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்! அதாவது கட்சியில் எடப்பாடிக்கு மேலான அதிகாரத்தில் இருப்பவர்!
ஜூலை 11 பொதுக்குழுவுக்கு முன் நடந்த அந்தக் கட்சியின் பொதுக்குழு முடிவுப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டது என்று எடுத்துக் கொண்டாலும், அவர்களது மற்றொரு கூற்றுப்படி, பன்னீர் செல்வம் அந்தக் கட்சியின் பொருளாளர்!
எந்த விதத்தில் பார்த்தாலும் பழனிச்சாமி, அந்தக் கட்சியில் ஏற்றுள்ள பதவியைவிட பெரிய பதவி பன்னீருடையது! அவருக்கு அந்த அலுவலகத்திற்குள் வர எல்லா உரிமையும் உள்ளது.
நிலைமை அப்படி இருக்க, ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளரோ அல்லது பொருளாளரோ, மற்றும் அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், அந்தக் கட்சியின் அலுவலகத்திற்குள் செல்வதை எப்படிக் காவல்துறை தடுத்து நிறுத்த முடியும்?
சராசரி அறிவு படைத்தவனுக்குக் கூட புரியும் இந்த விவகாரம். நான்கு ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி புரிந்தது மட்டுமின்றி - காவல் துறையை தன்னிடம் வைத்திருந்த முன்னாள் மாண்புமிகுவுக்குத் தெரியாது போனது எப்படி?
உள்கட்சி விவகாரங்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு வராதீர்கள்; நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள்; என்று நீதிமன்றமே கூறிவிட்ட நிலையில்; காவல் துறை அதனுள் தலையிட முடியுமா? உள்கட்சி விவகாரங்கள் எல்லை மீறி சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மாறிய நிலையில்தான் காவல் துறை தலையிட்டுள்ளது!
கழக அரசின் காவல் துறை, இந்த விவகாரத்தில் எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு செயல்பட்டுள்ளது! பழனிச்சாமி கூட்டம் பாராட்ட வேண்டாம்; பழி சுமத்துவதை நிறுத்தட்டும்!
- சிலந்தி
Also Read
-
”முதல்வர் விஜயின் போலீஸ் ராஜ்யம்.. உத்திரபிரேதசத்தை நினைவுபடுத்தும் கோவை சம்பவம்” : முரசொலி தலையங்கம்!
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?