Tamilnadu

மதக்கலவரத்தை தூண்டும் பதிவு : பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் கைது - சைபர் கிரைம் போலிஸ் அதிரடி நடவடிக்கை !

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மநபர் ஒருவர் இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு மதத்திற்கு ஆதரவாகவும், ஒரு மதத்திற்கு எதிராகவும் கருத்தக்களை பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த வீடியோவை தமிழ்நாடு பா.ஜ.க.வின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

நாட்டின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலோ, பொது அமைதியை குலைக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இவரது பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மத கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் இவர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சவுதாமணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், சவுதாமணி மீதான புகார் தொடர்பாக மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதாகவும், அவர்களது விசாரணையில் சவுதாமணி பதிவிட்ட வீடியோவால் மதக்கலவரம் தூண்டப்படும் என்பதையும் உறுதி செய்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் இதனால் காவல்துறையினர் அவர் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி சவுதமணியின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில் தற்போது, மத கலவரத்தை தூண்டும் வகையில் இவரது பதிவு இருந்ததால், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: அப்பளம் போல் நொறுங்கிய கார்.. உடல் நசுங்கி கணவன் - மனைவி பரிதாப பலி : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம் !