Tamilnadu

சுற்றுலா வந்த இடத்தில் விபரீதம்.. கடல் அலையில் சிக்கிய 3 சிறுமிகள்: உறவினர்கள் கண்முன்னே நடந்த சோகம்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான வேளாங்கண்ணிக்கு விடுமுறை தினத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜகம்பீரம் என்ற ஊரிலிருந்து உறவினர்கள் 15 பேர் சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குச் சொந்தமான விடுதியில் தங்கியுள்ளனர்.

பின்னர் அனைவரும் மகிழ்ச்சியாகக் கடற்கரைக்குச் சென்று குளித்துள்ளனர். அப்போது இவர்களுடன் இருந்த ஷெரின் (19),ரியானா (13),சஹானா (14) ஆகிய மூன்று சிறுமிகள் கடல் அலையில் சிக்கியுள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா வந்த மூன்று பேர் கடல் அலைகள் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் உறவினர்கள்..? போஸ்டர் அடித்து பகிரங்க மிரட்டல் விடுத்த இளைஞர்..