Tamilnadu

எஸ்.பி.வேலுமணி உறவினர்கள் வீட்டில் IT ரெய்டு: தந்தை, உறவினர்கள் வீடு என 6 இடங்களில் சோதனை - பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இந்நிலையில் மீண்டும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியனர். மேலும் கணக்கில் வராத ரூ. 13 லட்சம், 2 கோடி வைப்புத்தொகை ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவற்றை போலிஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த காலத்தில் ரூ.58.23 கோடிக்கு அதிகமாகச் சொத்துக்களை சேர்த்திருப்பதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதுமட்டுமல்லது, அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் எஸ்.பி வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை வடவள்ளியில் எஸ்.பி வேலுமணிக்கு நெருங்கிய உறவினரான சந்திரசேகர் வீடு மற்றும் பி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராக இருப்பவர் வடவள்ளி சந்திரசேகர். முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவராக உள்ள இவர், அ.தி.மு.க நாளேடான நமது அம்மா பத்திரிகையின் வெளியீட்டாளராக உள்ளார்.

அவரது மனைவி சர்மிளா மாநகராட்சியின் 38 வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். ஏற்கனவே முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சோதனையிட்ட போது சந்திரசேகரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அப்போது சோதனை நடந்தது. இந்த நிலையில், வடவள்ளி, தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள சந்திரசேகரின் வீட்டுக்கு வந்த 8 பேர் கொண்ட வருமானவரித் துறை அதிகாரிகள் குழு அவர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர பி.என்.புதூரில் உள்ள சந்திரசேகரின் தந்தை வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய ஆலயம் பவுண்டேஷன் உள்ளிட்ட 6 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: 6 மாவட்டங்கள்.. 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சோதனை.. அடுத்து கைதாகும் எஸ்.பி.வேலுமணி?