Tamilnadu

பயிற்சியின்போது சுருண்டு விழுந்த ஜிம் மாஸ்டர்.. மதுபோதையில் பறிபோன உயிர்.. என்ன நடந்தது ?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (42). கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற இவர், அந்த பகுதியில் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ஜிம்முக்கு சென்ற இவர், திடீரென வாந்தி எடுத்து மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயக்குமாரின் சகோதரர் மற்றும் உடனிருந்தவர்கள், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜெயக்குமார் விஷம் அருந்தியுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சமீப காலமாக மதுபழக்கத்திற்கு அடிமையான ஜெயக்குமார், வீட்டிற்கு தினமும் குடித்து விட்டு வந்துள்ளார்.

இதனால் இவருக்கும், இவரது மனைவி தங்க பாய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருப்பினும் அதை செவி கொடுக்காத ஜெயக்குமார் கடந்த 2-ம் தேதி உச்சக்கட்ட போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இவரது மனைவி, ஜெயக்குமாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான ஜெயக்குமார், சம்பவத்தன்று தனது மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜெயக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது மனைவி தங்கபாய் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரது உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஒரு ஜிம் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இனி சமூக வலைதளத்தில் சம்பாதிப்பவர்களும் வரி செலுத்த வேண்டும்.. அமலுக்கு வந்தது புதிய விதி !