Tamilnadu

AIIMS செங்கல்.. நீட் போராட்டம்.. சட்டப்பேரவை சம்பங்கள் : இளைஞரணி செயலாளராக 4வது ஆண்டில் உதயநிதி ஸ்டாலின்!

கோடிக்கனக்கான தொண்டர்கள் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடைசி தொண்டன் நான் எனத் தன்னை இணைத்துக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். தி.மு.க இளைஞரணிச் செயலாளர் ஆக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றோடு 3 ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ இதுவரை கடந்த வந்த பாதை இதோ..

கடந்த 2011ஆம் ஆண்டின் இறுதியில் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமானார். 2012ஆம் ஆண்டு கதாநாயகனாக உருவெடுத்தார். படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி சேலத்தில் உதயநிதி நற்பணி மன்றத்தை தொடங்கினார். இந்த உதயநிதி நற்பணி மன்றம் இன்றைக்கு தமிழகம் முழுவதும் மாவட்டம், வட்டம், கிளை என பரவி மக்கள் பணியாற்றி வருகிறது.

வெறும் திரைப்படத்தை சார்ந்து மட்டுமே பயணிக்காமல், சமூகப் பணிகளிலும் சளைக்காமல் இம்மன்றங்கள் ஈடுபட்டு வருகிறது. உதாராணமாக ஆங்காங்கே உள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகள் வழங்குவது தொடங்கி, கொரோனா நிவாரணம் வரை சொல்லிக் கொண்டே போகலாம்.

தி.மு.க-வை பின்பற்றுபவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள் என்பதை அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி என அனைவரும் நிரூபித்துள்ளனர். அவர்களின் வழியில் உதயநிதியும் மிஞ்சவில்லை என்பதற்கு ஏற்றாற்போல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊராட்சி சபைக் கூட்டங்களில் பங்கேற்று எளிய மக்களை சந்தித்தார்.

அதன் பின்னர் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவின் வெற்றிக்காகவும், தமிழக மக்களின் விடியலுக்காகவும் வீதி வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து வெற்றியை பெற்றுத்தந்தார்.

உதயநிதியின் மேடைப் பேச்சுகளால் அப்போதிய நேரத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க ஆளுங்கட்சியே ஆட்டம் கண்ட நிகழ்வுகள் ஏராளம். உதாரணத்துக்கு, உதயநிதி பொய் உரைக்கிறார் என பல மேடைகளில் பதற்றத்துடன் பிதற்றினார் பா.ம.கவின் அன்புமணி. அதுமட்டுமல்லாமல், முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியும் பிரச்சாரத்தில் உதயநிதியின் பேச்சுக்கு பதிலளிக்கும் நெருக்கடிக்கு ஆளானார் என்பது வரலாறு.

“அரசியலோடு பிறந்தவன்; அரசியலைப் பார்த்து வளர்ந்தவன்; எனக்கு அரசியல் புதிதல்ல” என்று சொல்லும் உதயநிதி, தாத்தா கலைஞருக்காகவும், தந்தை தளபதிக்காகவும், இவ்விருவரின் படை வீரர்களுக்காகவும் பிரசாரத்தில் ஈடுபட்டு இளைஞர்கள் தி.மு.க. பக்கம் இருக்கிறார்கள் என்பதை மெய்ப்பித்திருந்தார்.

கள செயல்பாடுகளில் முக்கியம் போராட்டமே என்ற உண்மையை உணர்ந்து சிறுபான்மை மக்களை பாதிக்கும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி.மு.க இளைஞரணி சார்பில் மாபெரும் போராட்டத்தினை நடத்தி தொண்டர்களோடு தொண்டனாக கைதாகிறார்.

பின்னர், எதிர்கட்சித் தலைவரும், இன்றைய முதலமைச்சரும், கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலர உடன்பிறப்புகளுடம் களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார் அவர்.

அந்தப் பிரச்சாரத்தில் ஒற்றை செங்கல் மூலம் ஒன்றிய பா.ஜ.க அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தினார். தமிழகத்தோடு சேர்ந்து அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்ற மாநிலங்களில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், மதுரையில் மட்டும் கட்டுமானப் பணிகள் மந்த நிலையில் இருந்தது.

இந்த சூழலில், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் அருகே பிரசாரத்தில் ஈடுபட்ட போது, “மதுரையில் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்திருக்கிறேன்” என்று கூறி ஒரு செங்கலை காட்டினார்.

உதயநிதியின் இந்த பிரசாரம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து தனது பிரசாரக் கூட்டங்களில் எய்ம்ஸ் தொடர்பான செங்கல் பிரசாரத்தை அவர் மேற்கொண்டு வருகிறார். அடுத்த நாள் பிரசாரக் கூட்டத்தில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட இன்னொரு செங்கலை எடுத்து வந்த பிரசாரம் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.

நீட் எதிர்ப்பு போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம், புதியக் கல்விக்கொள்கைக்கு எதிரான போராட்டம், வேளாண் விவசாய சட்டம், பெட்ரொல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, பொருளாதார சீரழிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பா.ஜ.க அரசின் மக்கள் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து போராட்டம் என பல போராட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் முன்னின்று நடத்தினார்.

தி.மு.க கழகத்தின் தொண்டன், இளைஞரணிச் செயலாளர், முரசொலி அறக்கட்டளைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், தி ரைசிங் சன் ஆங்கில இதழின் வெளியீட்டாளர் என ஓங்கி உயர்ந்து கழகத்தின் காவல் அரணாக காட்சியளிக்கும் அவர், மக்கள் நலனை என்றும் இதயத்தில் சுமந்திருப்பவர் என்பதை அவரது மக்கள் நலப்பணிகள் உலகிற்கு உணர்த்துகின்றன.

இந்நிலையில் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பெருமையும்-கடமையும் நிறைந்த தி.மு.க இளைஞரணிச் செயலாளராக மூன்றாண்டுகளை நிறைவு செய்து, இன்று 4-ம் ஆண்டு பயணத்தை தொடங்குகிறேன்.

நம்பிக்கை வைத்து பெரும் பொறுப்பை வழங்கிய நம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் - பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட தலைமை-மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு நன்றி.

உடன் உழைக்கும் இளைஞரணியினர் - உடன்பிறப்புகள் - செல்லும் திசையெங்கும் தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து என்னிடம் அன்பு பாராட்டும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். சமூகநீதியை நிலைநிறுத்த, கழகத்தை வளர்த்தெடுக்க பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியர் வழியில் தொடர்ந்து உழைத்திடுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: மிகச்சிறந்த நிர்வாகி என நிரூபித்துப் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின்!