Tamilnadu

300 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தமிழின் முதல் பைபிள்.. - லண்டனில் கண்டுபிடித்த தமிழக அரசு !

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவ தூதரான பார்தோலோமஸ் ஸிகன்பால்க் என்பவர் 1706 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தரங்கம்பாடி பகுதிக்கு வந்தார். (அப்போது தரங்கம்பாடி டென்மார்க் நாட்டினரின் முக்கிய தளமாக விளங்கியது). அவர் தமிழ்நாட்டு வந்ததும் இங்கு ஒரு அச்சகம் நிறுவினார். இதையடுத்து 1715 ஆம் ஆண்டு பைபிளில் உள்ள புதிய ஏற்பாடு என்ற பகுதியை தமிழில் மொழி பெயர்த்தார். இதுவே தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகமாகும்.

இந்தப் பைபிளை தான் சார்வட்ஸ் என்ற மற்றொரு கிறிஸ்துவ தூதர், தஞ்சாவூர் பகுதியை அப்போது ஆட்சி செய்து வந்த செர்ஃபோஜி மன்னரிடம் கொடுத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து சுதந்திரம் அடைந்த பிறகு தமிழக அரசு இந்த பைபிளை தஞ்சாவூரின் சரஸ்வதி மாளிகை அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைத்தது.

பல ஆண்டுகள் அங்கிருந்த இந்த பைபிள், கடந்த 2005 ஆண்டு காணாமல் போனது. பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் லண்டன் அரசர் வைத்துள்ள பொருட்களின் படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் தமிழ்நாட்டில் காணாமல் போன பைபிள் போன்ற ஒரு புத்தகம் இடம்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தமிழ்நாட்டு காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிஐடி பிரிவு கண்டுபிடித்துள்ளது.

இந்த நிலையில் அந்த பைபிளை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் பணிகளை சிஐடி காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முதல் முறையாக அச்சடிக்கப்பட்ட பைபிள் நூல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: KGF பட வில்லன் நடிகர் சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து - பெங்களூரு சாலையில் நடந்த கோரம் !