Tamilnadu

‘OPS அண்ணே நீங்க ஒருங்கிணைப்பாளர் இல்ல.. எந்த அதிகாரமும் இல்ல’ : EPS கடிதம்.. உச்சகட்டத்தில் அதிமுக மோதல்

கடந்த வாரம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட 23 தீர்மானங்களும் பொதுக்குழுவால் நிராகரிக்கப்பட்டதாக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார். மேலும் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் அறிவித்தார்.

இதன் பின்னர் தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ் மகன் உசேன் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று ஜூலை 11-தேதிக்கு பொதுக்குழு ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

இதனிடையே ஓ.பி.எஸ் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழு என முழக்கமிட்டு பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர். மேலும் ஜூலை 11-தேதி அறிவிக்கப்பட்ட பொதுக்குழு அறிவிப்பு செல்லாது எனவும், அதிமுகவை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார்கள் எனவும் கூறினார். இதன் காரணமாக அதிமுக பொதுகுழுவில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் வெளியேறிய ஓ.பி.எஸ்ஸை சிலர் தண்ணீர் பாட்டிகள் வீசி தாக்கினர்.

அதைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இப்போது செல்லாது எனவும், பொதுக்குழு ஒப்புதல் பெறாத காரணத்தால் அவை செல்லுபடியாகாது எனவும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் வழங்கும் உள்ளாட்சி தேர்தல் படிவத்தில் கையெழுத்திட தயாராக இருப்பதாகவும்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட தயாரா எனவும் ஓ.பி.எஸ் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தில் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த கடிதத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அன்புள்ள அண்ணனுக்கு வணக்கம் என்று தொடங்கியுள்ள அக்கடிதத்தில், "கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கட்சிப் பொதுக்குழுவில் 1.12.2021 அன்று நடைபெற்ற கட்சியின் செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கட்சி சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல" எனக் கூறியுள்ளார்.

மேலும், "நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கட்சியின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அதிமுகவை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தில் ஓ.பி.எஸ்ஸை 'கழக பொருளாளர்' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பூலான் தேவி வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது.. 42 ஆண்டுகளாக சாமியார் வேடமிட்டு போலிஸை ஏமாற்றியது எப்படி?