Tamilnadu

‘எடப்பாடி இப்ப மட்டும் இல்ல அப்பயே மோசம்’ : கொடநாடு சம்பவம்.. துரோக அரசியலை அம்பலப்படுத்திய EPS சகோதரர்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை பதவி உருவாக்கப்பட்டது.‌ தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளராக, சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீரீசெல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் கொண்டுவந்த தீர்மானத்தை பொதுக்குழுவே நிராகரித்த சம்பவம் அரங்கறியது. மேலும் உட்கட்சி பூசல் காரணமாக பல மாவட்டங்களில் கட்சித்தொண்டர்கள் மத்தியில் மோதல் போக்கு என்பது அரங்கேறும் சூழல்களும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மீது அவரது சகோதரர் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அவர் அதில் கூறியிருப்பதாவது, “எடப்பாடி பழனிச்சாமியை பொறுத்தவரை உதவி செய்பவர்களை பழிவாங்குவார். குறிப்பாக என்னை, சேலம் எம்.பி, கண்ணன், செங்கோட்டையன் மற்றும் சசிகலா உள்ளிட்ட பலருக்கு துரோகம் செய்துள்ளார்.

தினகரன் சிறைக்குச் சென்றதற்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம். துரோகம் பன்னுவதில் இவரைவிட்டால் உலகத்தில் யாரும் இருக்கமாட்டார். பழைய ஆட்கள் இருந்தால் மரியாதை கொடுக்கமாட்டார்கள் என்பதால் அவர்களை எடப்பாடி பழிவாங்குவார்.

மேலும் கொடநாடு கொலையில் ஆதாயம் அல்லது பாதிக்கப்பட்டவர்கள்தான் செய்திருப்பார்கள். காரியம் வேண்டும் என்றால் எப்படி வேண்டுமாலும் செயல்படுவார். முதலமைச்சராக இருக்கும் போது அதை பார்த்திருப்பீர்கள். அவர் எப்போதுமே அப்படிதான்” எனத் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த பேச்சு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உதய்பூர் படுகொலை - ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!