Tamilnadu

“அண்ணா - கலைஞர் ஆகிய தலைவர்களின் தரம் மிக்க அரசியல்.. இதோ ஓர் எடுத்துக்காட்டு” : கரு.பழனியப்பன் பளீச்!

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்களின் தரம்மிக்க அரசியல் குறித்து இயக்குநர் கரு.பழனியப்பன் தரும் விளக்கம் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இயக்குநர் கரு.பழனியப்பன் பேச்சின் ஒரு பகுதி வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது! அதுவருமாறு:-

அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கக் காலத்தில் இருந்து பார்த்தீர்களேயானால், அப்படி தம்பிகளை தயார்படுத்திக்கிட்டு இருந்தார். “மாநில சுயாட்சி” என்கிற புத்தகத்தை எழுதிய கு.ச.ஆனந்தன் அவர்கள் ஒரு வழக்கறிஞர்!

கு.ச.ஆனந்தன் கட்சியில் மிகப்பெரிய ஈடுபாடு கொண்டிருந்தபோது, அண்ணா சொல்கிறார், “உன்னைப் போல இந்த விஷயம் தெரிந்தவர்கள் எல்லாம் முதலில் அதுகுறித்து “கண்டண்ட்” கொடுக்கணும், “மாநில சுயாட்சி” என்ற பிரச்சினையை நாம் பேசுகிறோம். அதைப் பற்றிய விஷயங்களை நீ புத்தகமாக எழுது” என்கிறார்! பின்னர் கலைஞர் அவர்கள் வந்து அதனை புத்தகமாக எழுத பணிக்கிறார்!

கு.ச.ஆனந்தன்

இப்பவும் மாநில சுயாட்சிக்கான புத்தகம் என்று பார்த்தீர்களேயானால், “பைபிள்” எது என்றால் கு.ச.ஆனந்தன் எழுதிய புத்தகம் தான்!

எம்.ஜி.ஆர். அவர்கள் மாநில உரிமைகளை பேசப் போகும் போது, ஒரு அறிக்கை ரெடி பண்ணணும், அதற்காக வேணும் என்று சொன்ன போது, அ.தி.மு.க.வில் ஆளே இல்லாமல், கு.ச.ஆனந்தனை கூப்பிட்டது தான் வரலாறு!

ஆனந்தன் முழுமையாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இல்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபிமானி!

கலைஞர் அவர்களுடைய தொண்டர் அவர், எம்.ஜி.ஆர். சொன்ன உடனே, ஆனந்தன் வந்து, கலைஞர் அவர்களிடத்தில் சொல்கிறார். “இந்த மாதிரி எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை கூப்பிட்டு இருக்கிறார். இது பேசுவதற்காக வேண்டும்” என்று! அப்போ கலைஞர் சொல்கிறார் “அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். என்று நாம் எதிர் - எதிர் அரசியல் செய்றோம்ன்னு நினைக்காதே ஆனந்தா நீ!

இந்த மாநில உரிமையை முதல்வர் பேசப்போகிறார். அதை ரொம்ப சிறப்பா எழுத முடிஞ்ச ஆள், அதைப் பற்றி முழுமையா தெரிஞ்ச ஆள் நீங்கள்தான், அதனாலே அதைப் பற்றி எழுதிக்கொடு” என்று சொல்கிறார். அப்போ, எவ்வளவு தரமான ஒரு அரசியல், இருந்திருக்கு பாருங்க. நமக்கு அவர் (எம்.ஜி.ஆர்.) எதிரிதான்; அது வேறு!

ஆனா மறுபடியும், நீங்கள் தொடர்ச்சியாக அண்ணா அவர்களின் பேச்சை கேட்பதினால், ஏதோ நான், சொல்வதாக நினைத்துக் கொள்ளக்கூடாது, அது வந்து மாநில சுயாட்சி புத்தகத்தின் முன்னுரையில் இருக்கிறது. எம்.ஜி.ஆர். கூப்பிட்டதும், இவர் போய் எழுதி கொடுத்துப் போனதும், பின்னர் பேராசிரியர் அவர்கள் வந்து அவரைப் பாராட்டியதும்.

அப்போ, இதைப்போல பேசுகிற, ஆட்களை ஆனந்தனை போல நூறு பேரை அண்ணாவும் கலைஞரும் தயார் செய்தாங்க. நீங்கள் யாரை தயார் செய்து இருக்கீங்க, உங்களிடம் யார் இருக்காங்க?

அப்போ இதனை அ.தி.மு.க.விடம் எதிர்பார்க்கக் கூடாது. நீங்க தேவையில்லாமல் எல்லாவற்றையும் எல்லோரிடமும் எதிர்பார்க்காதீங்க! தி.மு.க.விற்கு ஒரு கொள்கையும், ஒரு நிலைப்பாடும் - அடிப்படையில் அந்தக்கட்சிக்கு இருக்கு! அதில் இருந்து அது மாறவே மாறாது. அ.தி.மு.க.வுக்கு என்ன அடிப்படை கொள்கை இருக்கு, தி.மு.க.வை எதிர்ப்பது என்பதைத் தவிர!

இவ்வாறு கரு.பழனியப்பன் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: “பழங்குடியினர்களுக்கு துரோகம் செய்த பா.ஜ.க. பழங்குடியினர்களின் பாதுகாவலர்களாம்” : முரசொலி தாக்கு!