Tamilnadu

சாலையில் கிடந்த தங்க ஆபரணத்தை போலிஸிடம் ஒப்படைத்த தி.மு.க வேட்பாளர் - குவியும் பாராட்டு!

காஞ்சிபுரத்தில், சாலையில் கிடந்த 5 கிராம் தங்க மோதிரத்தை மாவட்ட காவல்துறையினரிடம் நேர்மையாக ஒப்படைத்த தி.மு.க வேட்பாளர் சுப்பராயன். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நிறுத்தி வைக்கப்பட்ட 36-வது வார்டுக்கு தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வேட்புமனு துவங்கி இன்று நிறைவு பெற்றது.

இந்நிலையில், மதியம் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய காஞ்சிபுரம் தி.மு.க வேட்பாளர் சுதா என்கின்ற சுப்பராயன் வந்தார். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு நரசிங்கராயர் தெரு அருகே மோட்டார் சைக்கிளில் சுப்பராயன் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது தரையில், மின்னும் வகையில் ஒரு பொருள் கிடந்துள்ளது. அதனருகில் சென்று பார்த்தபோது அது 5 கிராம் எடையுள்ள தங்கமோதிரம் என தெரிந்தது. இதையடுத்து, இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ.,விடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கண்டெடுக்கப்பட்ட மோதிரத்தை காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு எம்.எல்.ஏ சுந்தர் தெரிவித்தார். அதன்பேரில் காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டு தி.மு.க வேட்பாளர் சுதா என்கின்ற சுப்பராயன் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினரிடம்மோதிரத்தை வழங்கினார். அவரின் இச்செயலுக்கு அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read: பைக்கில் சென்ற பெண்ணின் தலையில் விழுந்த தேங்காய்.. இணையத்தில் வலம்வரும் அதிர்ச்சி வீடியோ!