Tamilnadu

“தெரியாமல் சொல்லிவிட்டேன்.. எனக்கு இதுதேவைதான்..” : பஞ்சாங்கம் விவகாரத்தில் சரண்டர் ஆன நடிகர் மாதவன்!

பிரபல நடிகர் மாதவன், பொய் வழக்குகளால் சிறை தண்டனை பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்ட படத்தில் நடித்துள்ளார். "ராக்கெட்ரி - நம்பி விளைவு" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் வரும் ஜூலை ஒன்றாம் தேதி வெளிவரவுள்ளது.

இந்த படத்தின் வெளியீடு குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மாதவன், "அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் பல கோடிக்கணக்கில் செலவழித்து 32, 33 வது முறைதான் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை வெற்றிகரமாக அனுப்பினர்.

ஆனால், இந்தியா முதல் முயற்சியிலேயே அதை செய்து காட்டியது. இதற்கு காரணம், பஞ்சாங்கத்தின் உதவியுடன் இந்தியா செவ்வாய்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பியதுதான்" எனக் கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கணிப்பில் சில மில்லி நொடிகள் தவறினாலும் பெரும் தோல்வியை தழுவக்கூடிய இந்த திட்டத்தையும், பல விஞ்ஞானிகளின் கடும் உழைப்பில் வெற்றி பெற்ற இந்த திட்டத்தை அவர் இவ்வாறு கூறி சிறுமைப்படுத்தியது பெரும் விமர்சனத்துக்குள்ளானது,

மாதவனின் இந்த கருத்துக்கு இஸ்ரோ மையத்தின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை மாதவனின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "பஞ்சாங்கம் என்பது ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய ஒன்று கிடையாது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்டது. மாறும் பஞ்சாங்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய் கிரகம் செல்வது என்பது முடியாத காரியம்.

எவ்வளவு வேகத்தில் எப்படி சென்றால் இலக்கை அடைவோம் என்பதை பல முறைகளை வைத்து கணித்து பல ஆய்வுக்கு பிறகுதான் நேரம் கணிக்கப்படுகிறது. பஞ்சாங்கத்தை பார்த்து நேரம் குறிக்கப்படுவது கிடையாது " எனக் கூறினார்.

இந்த நிலையில் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரோல் குறித்த செய்திகளை ரீ-ட்வீட் செய்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “அல்மனாக்கை, தமிழில் பஞ்சாங்கம் என்று அழைத்த நான் இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தகுதியானவன்தான். எனது அறியாமையை அறிகிறேன். எனினும் உண்மையில், வெறும் 2 இன்ஜின்களை வைத்து செவ்வாய்கிரகத்துக்கு நாம் செயற்கைகோள் அனுப்பி வெற்றிப்பெற்றதை இந்த விமர்சனங்கள் எல்லாம் மாற்றிவிடாது. அது ஒரு சாதனைப் பதிவு. விகாஸ் இன்ஜின் ஒரு ராக்ஸ்டார்" எனக் கூறியுள்ளார்.

Also Read: "எங்கள் கரப்பான் பூச்சிகளை திரும்ப கொடுங்கள்".. நாசாவின் வித்தியாசமான கோரிக்கைக்கு காரணம் என்ன?