Tamilnadu

“வேலுமணிக்கு எதிராக முறைகேடு வழக்குக்கு தடையில்லை” : குட்டு வைத்து அனுப்பிய சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வேலுமணி தரப்பு வழக்கறிஞர், மனுவில் கூறப்பட்ட புகார்களில் உள்ள முகாந்திரம் குறித்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் கண்காணிப்பில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அதில் புகாரில் முகாந்திரம் இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது எனவும், வழக்கை முடித்து வைப்பது என முடிவு செய்த பின் வழக்குப்பதிந்தது தவ்று எனவும் வாதிட்டார்.

மேலும், உச்ச நீதிமன்ற அனுமதியுடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், அரசு ஏற்கனவே எடுத்த முடிவை மாற்ற முடியாது எனவும், உள்நோக்கத்துடன் வழக்குப் பதியப்பட்டுள்ளதால் வழக்குக்கு தடை விதிக்க வேண்டுமென வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, வழக்குப்பதிவு செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை எனவும், வழக்கை ரத்து செய்யக் கோர உரிமை உள்ளது என்ற போதும், ரிட் மனுவாக தாக்கல் செய்ய முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வேலுமணி மீதான வழக்குக்கு தடை விதிக்க மறுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும், மனுதாரர்களுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 25க்கு தள்ளிவைத்தார்.

Also Read: “இளம் பெண் கைலாசாவிற்கு கடத்தப்பட்டாரா?” - நித்தியானந்தா ஆசிரமத்திற்குள் நுழைந்து போலிஸ் தீவிர விசாரணை!