Tamilnadu

அ.தி.மு.க., ‘அடமானதிமுகவாக’ மாறிவிட்டது.. தாயாக இருந்த ஜெயலலிதாவை மறந்து விட்டார்கள்: கி.வீரமணி காட்டம்!

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திராவிடர் கழகத்தின் பொதுகுழு கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் முடிவில் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு, உயர்நீதிமன்ற பதவிகளில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”மதுரை ஆதினம் போன்றோர் ஆதீனமாக உலவ காரணம் திராவிடம்தான். மதுரை ஆதீனம் போன்றோரின் செயல் வித்தைகளுக்கு பயன்படுத்தலாம். பட்டினபிரவேசம் என்னால் என்ன என்று அனைவருக்கும் தெரியவந்தது போல சனாதானத்தில் ஆதீனம் என்றால் யார் என்பதும் அனைவருக்கும் தெரியட்டும்” எனக் கூறினார்.

மேலும், ”இந்தியாவில் பா.ஜ.க எதிர்கட்சிகளை ஒன்றிணையாமல் பிரித்தாளுகிறது. தமிழகத்தில் எதிர்கட்சியை வைத்து பொம்மலாட்டம் நடத்துகிறது. யார் வர வேண்டும், வரக்கூடாது என்பதை திட்டமிட்டு பா.ஜ.க செயல்படுகிறது. 2024தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

அ.தி.மு.க.வுக்கு திராவிடர் கழகம் தாய் கழகம் என்பதை அ.தி.மு.கவினர் மறந்துவிட்டார்கள். அ.தி.மு.கவின் தாயாக இருந்த ஜெயலலிதாவையும் மறந்துவிட்டார்கள். அ.தி.மு.க தற்போது டெல்லியில் அடமானமாக உள்ளது. அ.தி.மு.கவை டெல்லியில் இருந்து மீட்கும் நபர் யாரோ அவர் தலைமைக்கு வரட்டும்.

லேடியா? மோடியா? என கேட்ட ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக தற்போது அ.தி.மு.கவினர் செயல்படுகின்றனர். அ.தி.மு.க தங்களது அடமானத்தை மீட்டு தமிழ்மானம் காக்க வேண்டும். மிகப்பெரிய இயக்கமான அ.தி.மு.கவிற்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது வேதனையாக உள்ளது'' எனக் கூறினார்.

Also Read: “இரண்டே இரண்டு நல்லவர்கள் சேர்ந்தால்.. அறிவொளி கொடுக்கும் ஜமால் முகமது கல்லூரி” : முதலமைச்சர் புகழாரம்!