Tamilnadu

“பஞ்சாங்க மூலம் செவ்வாய்கிரக பயணமா? - அது முடியாதுப்பா” : மாதவனின் கருத்துக்கு இஸ்ரோ விஞ்ஞானி மறுப்பு!

பிரபல நடிகர் மாதவன், பொய் வழக்குகளால் சிறை தண்டனை பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்ட படத்தில் நடித்துள்ளார். "ராக்கெட்ரி - நம்பி விளைவு" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் வரும் ஜூலை ஒன்றாம் தேதி வெளிவரவுள்ளது.

இந்த படத்தின் வெளியீடு குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மாதவன், "அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் பல கோடிக்கணக்கில் செலவழித்து 32, 33 வது முறைதான் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை வெற்றிகரமாக அனுப்பினர்.

ஆனால், இந்தியா முதல் முயற்சியிலேயே அதை செய்து காட்டியது. இதற்கு காரணம், பஞ்சாங்கத்தின் உதவியுடன் இந்தியா செவ்வாய்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பியதுதான்" எனக் கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கணிப்பில் சில மில்லி நொடிகள் தவறினாலும் பெரும் தோல்வியை தழுவக்கூடிய இந்த திட்டத்தையும், பல விஞ்ஞானிகளின் கடும் உழைப்பில் வெற்றி பெற்ற இந்த திட்டத்தை அவர் இவ்வாறு கூறி சிறுமைப்படுத்தியது பெரும் விமர்சனத்துக்குள்ளானது,

இந்த நிலையில் இஸ்ரோ மையத்தின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை மாதவனின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், "பஞ்சாங்கம் என்பது ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய ஒன்று கிடையாது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்டது. மாறும் பஞ்சாங்கம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய் கிரகம் செல்வது என்பது முடியாத காரியம்.

எவ்வளவு வேகத்தில் எப்படி சென்றால் இலக்கை அடைவோம் என்பதை பல முறைகளை வைத்து கணித்து பல ஆய்வுக்கு பிறகுதான் நேரம் கணிக்கப்படுகிறது. பஞ்சாங்கத்தை பார்த்து நேரம் குறிக்கப்படுவது கிடையாது " எனக் கூறியுள்ளார்.

மாதவனின் தவறான கருத்துக்கு மறுப்பு தெரிவித்து மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நம்மில் பலர் நாம் நன்கு அறிந்த விஷயங்களை பொதுவெளியில் பேசவே சில நேரம் தயங்கும் நிலையில் மாதவன், மதுவந்தி போன்ற ஒரு சிலர் தனக்கு தெரியாத விஷயத்தை பொதுவெளியில் தைரியமாக பேசி சர்ச்சையில் சிக்குவது தொடர் கதையாகியுள்ளது.

Also Read: “காரில் இருந்து பெட்ரோல் திருடுவது எப்படி?” - தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியால் சர்ச்சை!