Tamilnadu

”13,331 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவு”.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முழு தகவல் இதோ!

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்படும் இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது எனவும், இவர்களுக்கு மதிப்பூதியம் மட்டுமே வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலம் ஆசிரியர்கள் அந்த பணியிடத்தில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலம் ஆசிரியர்கள் அந்த பணியிடத்தில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் நிரப்பப்படும்போது இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியரில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமெனவும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை நிரப்பும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் ’இல்லம் தேடி கல்வித் திட்டத்தில்’ பணி புரிந்த தன்னார்வலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வதற்கும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை “எண்ணும் எழுத்தும்” திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்பிடவும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளதாகவும், பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையையும் நிறைவுற்று காலிப்பணியிடம் நிரப்ப சிறிது காலமாகுமென்பதால், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஏற்பாடாக ஜூலை 1ஆம் தேதி முதல் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களின் விவரங்களின் அடிப்படையில் நிரப்பிக்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: கல்வியில் 15 ஆண்டு முன்னோக்கி உள்ளது தமிழ்நாடு.. எங்களுக்கு வேண்டாம் தேசியக் கொள்கை: முரசொலி தலையங்கம்!