Tamilnadu

வன விலங்குகளை சமைத்து கறியாக விற்பனை.. நடுகாட்டில் வேட்டை கும்பலை சுற்றிவளைத்து பிடித்த வனத்துறை!

திருவண்ணாமலை அடுத்த பாலியப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள கவுத்திமலை காப்பு காட்டில் தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்வதாகவும், வேட்டையாடும் வனவிலங்குகளை இளைஞர்கள் சமைத்து சாப்பிடுவதாகவும் வனத்துறை அலுவலர் சீனிவாசனுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை அடுத்து,நேற்று இரவு வனத்துறையினர் கவுத்திமலை காப்பு காட்டில் திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது காப்பு காட்டின் நடுவே வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு 9 பேர் கொண்ட கும்பல் தயாராக இருந்ததைப் பார்த்த வனத்துறையினர் உடனே அவர்களை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாலியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை, பச்சையப்பன், ரஞ்சித், மோகன்ராஜ், வெற்றி, அரிகிருஷ்ணன் மற்றும் மூலக்காடு கிராமத்தைச் சேர்ந்த சுதாகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலை ஆகிய 9 பேர் என தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் இருந்த 3 இருசக்கர வாகனங்கள்,நாட்டுத்துப்பாக்கி, நெற்றி பேட்டரி, டார்ச் லைட், வெடிமருந்து, வனவலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் வலைகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், வனவிலங்குகளின் மாமிசத்தை வாங்கி சாப்பிட்டு வந்த பாலியபட்டு கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித், மோகன்ராஜ், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 5 சிறார்களுக்கு வனத்துறையினர் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Also Read: “பங்களாதேஷில் மெடிக்கல் சீட்” : ஆசைக் காட்டி லட்சக்கணக்கில் மோசடி - அதிரடி நடவடிக்கை எடுத்த போலிஸ்!