Tamilnadu

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.07% மாணவர்கள் தேர்ச்சி.. முதலிடம் பிடித்த கன்னியாகுமரி மாவட்டம்!

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் முடிவடைந்தது. இந்த தேர்வை 9 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத பதிவு செய்திருந்த நிலையில், சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் உடனடி தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கன்னியாகுமரி மாவட்டம் 97.22% தேர்ச்சியுடன் முதல் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 2ம் இடத்தையும், விருதுநகர் மாவட்டம் 3ம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் 10ம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 8.55% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முன்னதாக தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் எனவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மாவட்ட அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தவிர மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்த கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. 93.76% மாணவர்கள் தேர்ச்சி: முழு விவரம் இதோ!