Tamilnadu

ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்த பெயிண்டர்: விபரீத முடிவால் நிர்க்கதியாகி நிற்கும் குடும்பம்!

தமிழ்நாட்டை ஆன்லைன் சூதாட்டத்தை தடைவிதிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட ரம்மி உள்ளிட்ட விலையாட்டுகளை தடைவிதிக்க சிறப்புக் குழு அமைத்து, நடவடிக்கை மேற்கொள்ள தீவிரம் காட்டியுள்ளார்.

இதனிடையே பொதுமக்கள் ஆன்லைன் மோசடியில் சிக்கும் வகையில், செயல்படும் ஆன்லைன் கடன் செயலி, ஆன்லைன் விளையாட்டு போன்றவற்றில் பணத்தை இழந்து ஏமாறவேண்டாம் என டி.ஜி.பி முதல் மாவட்ட ஆட்சியர்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனாலும் பொதுமக்கள் தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி பணத்தை இழப்பதும் தொடர்கதையாகி வருகின்றது. அந்தவகையில் சென்னையை சேர்ந்த பெயிண்டர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). இவருக்கு வரலட்சுமி, என்ற மனைவியும் பிரணவ் (8) பிரவீன் (6) ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். அரசு மற்றும் புதிய தனியார் கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வந்த நாகராஜ் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி 30 லட்ச ரூபாய் பணத்திற்கு மேல் இருந்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான நாகராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த மணலி காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அனுப்பிவைத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான காண்ட்ராக்டர் நாகராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தனது மனைவி பிள்ளைகளை நிர்க்கதியாக விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 20 சவரன் நகை அடகு வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடிய பெண்.. முழு பணத்தையும் இழந்ததால் எடுத்த விபரீத முடிவு!