Tamilnadu

தனக்கு தானே கல்லறை கட்டிய மூதாட்டிக்கு நடந்த சோகம்.. கிராம மக்களும், போலிஸாரும் எடுத்த முடிவு!

கன்னியாகுமரி மாவட்டம், பல்லுளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஷி. மூதாட்டியான இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இதனால் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்தார்.

பின்னர், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலையில் சேர்ந்துள்ளார். ஒரு நாளில் கூட விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்ததால் மூதாட்டிக்கு ஊராட்சிமன்றம் அவரை இரண்டு முறை பாராட்டிக் கவுரவித்துள்ளது.

இதற்கிடையில், நீங்கள் இறந்துவிட்டால் உங்களை யார் அடக்கம் செய்வார்கள் என பார்ப்பவர்கள் எல்லாம் மூதாட்டியிடம் கேட்டுள்ளனர். இதனால் ரோஷி மிகுந்த மனவேதனையடைந்துள்ளார்.

பிறகு ஊராட்சிமன்ற நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தன்னை அடக்கம் செய்வதற்காக ரூ.50 ஆயிரம் செலவு செய்து கல்லறை ஒன்றைக் கட்டியுள்ளார். இதைப்பார்த்த கிராம மக்கள் மூதாட்டியின் நிலையைக் கண்டு வேதனையடைந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மூதாட்டி ரோஷி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இவரின் நடமாட்டம் இல்லாததைக் கண்ட கிராம மக்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் இறந்து சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் மூதாட்டி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆய்வறிக்கை வந்த பிறகு மூதாட்டியின் ஆசைப்படி அவர் கட்டிவைத்துள்ள கல்லறையிலேயே உடல் அடக்கம் செய்யப்படும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

Also Read: டிக்கெட் இல்லாமல் 683 பேர் பயணம்.. ஒரே நாளில் 3.4 லட்சம் அபராதம் வசூல்: ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சி!