Tamilnadu

திருமண நாளில் மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற கணவன்.. பெற்றோர் கொடுத்த பரபரப்பு புகார்!

சேலம் மாவட்டம், ஜங்ஷன் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தி ராஜ். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. முன்னதாக இவர்களின் திருமணத்தின் போது, தலைகவசம் அணிந்துக்கொண்டு தம்பதி இருவரும் ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்திய பிறகு திருமணம் செய்துக்கொண்டனர்.

அப்போது இவர்களின் விழிப்புணர்வு பிரபலமாகி பரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மூன்று ஆண்டுகளில் கூடுதல் வரதட்சணை கேட்டு அடிக்கடி மனைவி தனஸ்ரீயை அடித்து கொடுமைப் படுத்தி வந்துள்ளார் கீர்த்தி ராஜ்.

இதனால், கணவரின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறி, தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார் தனஸ்ரீ. பின்னர், மனைவியை சமாதனம் செய்து நேற்று வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் கீர்த்தி ராஜ்.

பின்னர் அன்றிருவே தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாக கீர்த்தி ராஜ், தனஸ்ரீ பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே புறப்பட்டு கீர்த்தி ராஜ் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது மகளில் உடலில் காயங்கள் இருந்துள்ளது. மேலும் வீடு முழுவதும் ரத்தக்கரை இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த தனஸ்ரீ பெற்றோர் தனது மகளை கொலை செய்திருக்கிறார்கள் என போலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும், திருமணமான சில மாதங்களுக்குப் பின்னர் ஆடி கார் கேட்டு மகனை அவரது கணவர் அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்த கொடுமையான வாழ்க்கை வேண்டாம் என கூறிதான் மகள் எங்களுடன் வசித்து வந்தார். ஆனால் அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்று கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர் என காவல்நிலையத்தில் தனஸ்ரீ பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

மேலும், இந்த தம்பதிகளின் மூன்றாம் ஆண்டு திருமண நாளில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Also Read: தண்ணீர் வாங்க சாலையை கடந்த போது நடந்த விபரீதம்.. டூவிலர் மோதியதில் சிறுவன், கல்லூரி மாணவன் பரிதாப பலி!