Tamilnadu

நெடுஞ்சாலையில் பைக் ரேஸ் சென்ற இளைஞர்கள்.. தூக்கி வீசப்பட்ட 60 வயது பெண்: கொடூர சம்பவம்!

சென்னை அடுத்த முடிச்சூரை சேர்ந்தவர் விஸ்வா. இவர் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து தாம்பரம் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸ் சென்றுள்ளனர். மேலும் இவர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வேகமாகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர்.

அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் மீது மோதியுள்ளனர். இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அந்த பெண்ணிடம் இருந்து பையை போலிஸார் சோதனை செய்தபோது, அதில் போலிஸார் கேண்டீன் கார்டு ஒன்று இருந்துள்ளது. அதில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் செல்வகுமாரி என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே விபத்தில் உயிரிழந்தது செல்வ குமாரியா? அல்லது வேறு யாராவதா? என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்தி இருசக்கர வாகனத்தை போலிஸார் பறிமுதல் செய்து பைக் ரேஸ் சென்ற இளைஞர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: இறந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த பிள்ளைகள்: ஊர் மக்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!