Tamilnadu

“அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்த சகோதரர்” - குலை நடுங்க வைக்கும் ‘பகீர்’ சம்பவம் - பின்னணி என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே வாகன விபத்தில் இறந்த நபரது உடலை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து, அவரது சகோதரர் பதினெட்டு நாட்கள் கழித்து உடலை தோண்டி வேறோரு இடத்தில் அடக்கம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டஸ் (60). இவர் கடந்த 12 ம் தேதி மார்த்தாண்டம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வாகன விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 16 ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு பின் அவர்கள் தாய் தந்தையர் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கல்லறைத் தோட்டத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது சகோதரரான கிறிஸ்டோபர் என்பவர் அவரது மனைவி மற்றும் ஒரு சிலரோடு வந்து ஜெஸ்டஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டு இருந்த இடத்திலிருந்து தோண்டி எடுத்து வேறோரு இடத்தில் அடக்கம் செய்ய முயன்றுள்ளார்.

அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அதனை மீறி கிறிஸ்டோபர் ஜெஸ்டஸின் உடலை தோண்டி எடுத்து மாற்று இடத்தில் சிறிய அளவு பள்ளம் தோண்டி அதில் அடக்கம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் இது சம்பந்தமாக அவரது மகன் ஜெஸ்வின் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Also Read: சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞர் - களத்தில் இறங்கி உதவிய அமைச்சர் பெரியசாமி !