Tamilnadu

பெற்றோர்களே எச்சரிக்கை.. காருக்குள் விளையாடிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி.. நெல்லையில் நடந்த சோகம்!

நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த லெப்பை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். ஜேசிபி ஆப்பரேட்டர் ஆன இவருக்கு நித்திஷா (7), நித்திஸ் (5) என இரண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக நாகராஜ் கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக தனது அண்ணன் மணிகண்டனின் நண்பரிடமிருந்து காரை எடுத்து வந்துள்ளார்.

கோவில் கொடை முடிந்த பின்பும் கார் இவரது வீட்டின் முன்பாக நின்று உள்ளது. குழந்தைகளுக்கு உணவு அளிக்கும்போது அந்த காரில் அமர வைத்து உணவு ஊட்டுவதும் வைத்துள்ளனர். இந்த நிலையில், இன்றைய தினம் மதியம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விட்டு வீட்டிற்கு சென்ற அவரது தாய் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த நாகராஜன் குழந்தைகளான நிதிஷ் மற்றும் நிதிசா நாகராஜன் வீட்டு அருகே உள்ள சுதன் என்பவரது குழந்தையான கபிஷாந்த் ஆகியோர் காணாமல் போயுள்ளனர்.

இவர்களை வீட்டில் உள்ளவர்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அக்கம்பக்கத்தில் தேடிய நிலையில் ஆடு மேய்க்கும் தொழிலாளி காரில் விளையாடிக்கொண்டிருந்ததை தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மயங்கிய நிலையில் மூன்று குழந்தைகள் இருப்பது கண்டறிந்துள்ளனர்.

காரை உடைத்து குழந்தைகளை மீட்டு பணகுடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைகளை பரிசோதித்து பார்த்ததில் குழந்தைகள் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பணகுடி போலிஸார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்து வந்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Also Read: 14 வயதில் திருட்டு... 50 வயதில் 80 வழக்கு : கோடீஸ்வரனாக வலம் வரும் கொள்ளையன் - போலிஸில் சிக்கியது எப்படி?