Tamilnadu

12ம் வகுப்பு மாணவனை காவு வாங்கிய தந்தூரி சிக்கன்.. அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி : தொடரும் மரணங்கள்!

கேரளாவில் கடந்த மாதம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர். மேலும், ஷவர்மா தயாரிப்பது குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை உணவக உரிமையாளர்களிடம் எடுத்துக் கூறினர்.

இந்நிலையில் ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டு பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் திருமுருகன். இவர் 12ம் வகுப்புத் தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி நண்பர்களுடன் சேர்ந்த ஆரணி காந்தி நகர் சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் தந்தூரி சிக்கன் மற்றும் பிரைட் ரைஸ் சாப்பிட்டுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு சென்ற திருமுருகனுக்கு இரவு முழுவதும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அவரை பெற்றோர்கள் அருகே இருந்த மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவர் திருமுருகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏற்கனவே ஆரணியில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவர் ஒருவர் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “எறும்புகள் கண்டுபிடித்த 222 மில்லியன் டன் தங்கம் சுரங்கம்” : பீகாரில் ஒரு KGF - பின்னணி என்ன?