Tamilnadu

சாலை விபத்து.. படுகாயம் அடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சர் எ.வ.வேலு!

திருப்பத்தூரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டட திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழக்கும் விழா நடைபெற்றது. இதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.

இதையடுத்து ஜூன் 21ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இந்நிகழ்வுகளை முடித்துக் கொண்டு அமைச்சர் எ.வ.வேலு ஜோலார்பேட்டையில் இருந்து வாணியம்பாடி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது,வேப்பம் பட்டு அருகே சென்றபோது சாலை விபத்து ஒன்று நடந்துள்ளதை அமைச்சர் கவனித்துள்ளார். பின்னர் உடனே காரை நிறுத்தி விபத்து நடந்த பகுதிக்குச் சென்றார். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயம் அடைந்து வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

பிறகு விபத்து குறித்து அருகே இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகள் தகவல் கொடுக்கப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த அம்புலன்சில் படுகாயம் அடைந்தவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு படுகாயம் அடைந்தவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சாலை விபத்தில் படுகாயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும் வரை அமைச்சர் எ.வ.வேலு காத்திருந்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ஆத்திகர்களும், நாத்திகர்களும் உருவாக்கிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி” : அமைச்சர் சேகர்பாபு பேச்சு !