Tamilnadu

பெட்ரோல் விலையை 200% உயர்த்திவிட்டு 7% மட்டுமே குறைப்பதா?: மோடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த அறைகூவல்!

சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் பேசியதாவது, “ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் வரும் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மற்றும் மாக்ஸிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேசப் ஆகிய 4 காட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

26, 27 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாட்டில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் 25 ஆம் தேதி 31ஆம் தேதி வரை ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில், வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழ்நாட்டில் நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் இடதுசாரிகளோடு வி.சி.க-வும் இணைந்து 4 கட்சிகள் கண்டன இயக்கங்களை நடத்த உள்ளோம். இலங்கையில் கொந்தளிப்பு சூழ்நிலை எழுந்திருப்பதால் இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு அச்சம் எழுந்து சிறிய அளவில் பெட்ரோல் டீசல் வரியை குறைத்துள்ளார்கள். ஒன்றிய பெட்ரோல், டீசல் வரி குறைப்பு போதாது. பெட்ரோல், டீசல் விலையில் 200 சதவீத அளவுக்கு விலையை உயர்த்திவிட்டு வெறும் 7 சதவீதத்தை மட்டுமே குறைந்திருப்பது என்பது போதாது. பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி உள்ளிட்ட வரிகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்..

உஜ்வாலா திட்டத்தில் கொடுக்கும் சிலிண்டர் மானியம் ஒரு 6% பேருக்கு தான் கிடைக்கும். கொரோனா காலத்தில் 7 கோடி இளைஞர்கள் வேலைகளை இழந்துள்ளனர். ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் பருத்தி விலை பல மடங்கு உயர்ந்துள்ளன” என தெரிவித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து பேசிய கே.பாலகிருஷ்ணன், “விலைவாசி உயர்வை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். ஒட்டகத்தில் சுமையை ஏற்றுவது போல் விலைவாசி உயர்வை ஒன்றிய அரசு ஏற்றியுள்ளார்கள். வரும் 27 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 4 கட்சி தலைவர்களும் பங்கேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டியில், ”மே 25 - 31 வரை கிராமம் தோறும், வீடு தோறும் துண்டு அறிக்கைகள் மூலம் இடது சாரிகளோடு வி.சி.க இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். மோடி அரசு பொருளாதார சரிவு மற்றும் சமூக பிளவிற்கு காரணமாக இருக்கிறது. மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைககை அம்பளப்படுத்த வேண்டும். மே 25 முதல் துண்டு அறிக்கை கொடுக்க தொடங்கி விடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தரமற்ற பொருட்கள்.. அவசரகதியில் தயாரிப்பு”: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடிக்க காரணம் என்ன? பகீர் தகவல்!