Tamilnadu

மாலில் அனுமதியின்றி DJ பார்ட்டி.. அதீத போதையில் மயங்கிய வாலிபர் பலி.. சென்னை போலிஸார் அதிரடி நடவடிக்கை!

பிரேசில் நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற DJ மந்த்ரா கோரா என்பவரை அழைத்து வந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் DJ நிகழ்ச்சி நடத்துவதாக திட்டமிட்டிருந்தனர். அதன்படி நேற்று சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்திலும் DJ நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், நிகழ்ச்சி நடத்துவதற்கு எந்தவித முறையான அனுமதியும் காவல்துறையிடம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் இருபத்தி ஒரு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதிக மது போதையில் இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது நண்பரிடம் விசாரணை செய்ததில் தனியார் மாலில் இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறுவது போலிஸாருக்கு தெரியவந்தது

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அண்ணாநகர் துணை ஆணையர் சிவபிரசாத், அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதனை அடுத்து அரும்பாக்கம் மதுவிலக்கு பிரிவு போலிஸார் விக்னேஷ், மார்க், பரத் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு மது விருந்தில் பரிமாற வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் (23) என்பவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Also Read: சொகுசு காரில் கஞ்சா கடத்தல்; குமரி போலிஸிடம் சிக்கிய மும்பை SI-ன் கணவன்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்