Tamilnadu

பெற்றோர்களே உஷார்.. குளிர்பானம் என நினைத்து பெயிண்ட் தின்னரை குடித்த 10 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

கடலூர் மாவட்டம், உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பரமேஸ்வரி தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது 10 மாதமே ஆகும் பரமேஸ்வரியின் இரண்டாவது குழந்தை கிஸ்வந்த் வீட்டில் இருந்த பெயிண்டிங் தின்னரை குளிர்பானம் என நினைத்துக் குடித்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரி உடனே குழந்தையை அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றார்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிர்பானம் என நினைத்து பெயிண்டிங் தின்னரை குடித்த 10 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் கையில் எடுக்கும் அளவிற்கு அபாயகரமான பொருட்களைப் பெற்றோர்கள் வீட்டில் வைக்கக்கூடாது என்பது இப்போதும் தேவைப்படும் முக்கிய விழிப்புணர்வாக உள்ளது என்பதை இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.

Also Read: சொகுசு காரில் கஞ்சா கடத்தல்; குமரி போலிஸிடம் சிக்கிய மும்பை SI-ன் கணவன்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்