Tamilnadu

500 ஆண்டு தொன்மையான பச்சைக்கல் லிங்கம்; ரூ.25 கோடிக்கு விற்க முயன்ற இருவர்: நம்பவைத்து சிக்கவைத்த போலிஸ்!

சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கம் ஒன்று பதுக்கி வைக்கப்பட்டு கடத்தப்பட உள்ளது என்ற இரகசிய தகவல் சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு கிடைத்திருக்கிறது.

இதனை அடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் Dr.ஜெயந்த் முரளி உத்தரவுப்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் தினகரன் வழிகாட்டுதலின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் கதிரவன், காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜசேகரன், செல்வராஜ் மற்றும் காவலர்கள் பிரபாகரன், பாண்டிய ராஜ், சுந்தர் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் சிலைகளை வாங்கும் வியபாரிகள் போல் நடித்து சிலை கடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது அந்த சிலைக்கு விலை ரூபாய் 25 கோடி என சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படியாக சிலை கடத்தல்காரர்களை நம்பவைத்து அவர்கள் சிலையை காண்பித்தவுடன், சென்னை வெள்ளவேடு, புதுகாலணியை சேர்ந்த பக்தவச்சலம் (எ) பாலா, (46), சென்னை கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த பாக்கியராஜ் (42) ஆகிய இருவரிடம் இருந்து சிலையை கைப்பற்றி காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் தனி அறிக்கையுடன் மேற்கண்ட நபர்களை சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக சிலைக்கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்த தனிப்படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். மேலும், கடத்தப்பட்ட சிலையையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த சிலை நேபாள பாணியில் உருவாக்கப்பட்டது என்றும் அதில், பச்சைக்கல் லிங்கத்துடன் நாகாபரணம் தாங்கி அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வருடன் சுமார் 29 செ.மீ உயரம் 18 செ.மீ அகலம் பீடத்தின் அடிபாக சுற்றளவு சுமார் 28 செ.மீ எடை சுமார் 9 கிலோ 800 கிராம் எடையும் பச்சைகலர்லிங்கம் உயரம் சுமார் 7 செ.மீ அதன் சுற்றளவு 18 செ.மீ ஆக உள்ளது என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

500 ஆண்டுகள் தொன்மையானது எனவும் லிங்கத்தின் கீழே சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஆயுதங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது எனவும், படம் எடுத்த நாகத்தின் பின்புறம் கருடாழ்வார் கைகளை தூக்கிய வண்ணம் பொறிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: திருவிழா கொண்டாட்டத்தை ஒத்திவைத்து ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட இளைஞர்கள் பட்டாளம்.. மணப்பாறையில் நெகிழ்ச்சி!