Tamilnadu

வெளியான ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல்: யார் இந்த தஞ்சை கல்யாணசுந்தரம்? கடைகோடி தொண்டனையும் கொண்டாடும் திமுக

நாடு முழுவதும் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் டி.கே.எஸ் இளங்கோவன், ஆர்.எஸ் பாரதி, எஸ்.ஆர் பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார், கே.ஆர்.என் ராஜேஷ்குமார், நவநீத கிருஷ்ணன் ஆகியோரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியோடு நிறைவு பெறுகிறது.

இதனால் தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாகிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணிக்கான 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்கி எஞ்சிய 3 இடங்களுக்கான வேட்பாளர்களை முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதில், 3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாகத் தஞ்சை சு. கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா. கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் தஞ்சை கல்யாணசுந்தரம். கும்பகோணத்தின் பம்பப்படையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். 1940ல் ஜூன் 24ல் பிறந்த இவருடைய தற்போதைய வயது 82 ஆகும்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட கல்யாணசுந்தரம் தனது 16வது வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பேரறிஞர் அண்ணா அறிவித்த மாணவர் போராட்டத்தில் பங்காற்றினார்.

அதன் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த கல்யாண சுந்தரம் சுமார் 27 ஆண்டுகளுக்கு 1972-1998 வரை கும்பகோணம் ஒன்றியச் செயலாளராக பணியாற்றி வந்தார்.

1989ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவையாறு அடுத்த பாபநாசம் தொகுதியில் மூப்பனாரை எதிர்த்து தி.மு.க வேட்பாளராக களம் கண்ட கல்யாணசுந்தரம் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அதன் பிறகு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். இவர், மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவராகவும் உள்ளார். தற்போது மாநிலங்களவைத் தேர்தலில், தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சு.கல்யாணசுந்தரம்.

கல்யாணசுந்தரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வேட்பாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளது தி.மு.க தொண்டர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடைக்கோடி தொண்டனுக்கும் தக்க வாய்ப்பு வரும் நேரத்தில் அதற்கான அங்கீகாரத்தை கொடுத்து கொண்டாடும் இயக்கம் தி.மு.க என்பதை தஞ்சை சு. கல்யாணசுந்தரத்தை எம்.பி. தேர்தலுக்கு வேட்பாளராக அறிவித்ததன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இதன் மூலம் இல்லாத அவதூறுகளை பரப்பும் நோக்கில் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களை போன்று புதிதாக அரசியலுக்கு வந்த கத்துக்குட்டிகளின் விமர்சனங்கள் ஏதும் திராவிட முன்னேற்ற கழகம் எனும் ஆலமரத்தை சாய்த்துவிட முடியாது என்பதையும் இந்த அறிவிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Also Read: ”பாரபட்சமில்லாத தமிழக முதல்வரின் செயல் மனிதநேயத்தை கட்டமைக்கும் பாலமாக உள்ளது” -இலங்கை பத்திரிகை புகழாரம்