Tamilnadu

விபத்தில் உயிரிழந்த குழந்தை.. கோவில் கட்டி ஆண்டு தோறும் திருவிழா எடுக்கும் பெற்றோர் : நெகிழ்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வெள்ளையம்மாபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்குக் காவியா, தனுஜா என்ற இருமகள்களும், சண்முகநாதன் என்ற மகனும் இருந்தனர்.

இவர்களது இரண்டாவது மகள் தனுஜாவிற்கு கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது பன்னாங்கொம்பு அருகே சென்றபோது வேன் மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை தனுஜா உயிரிழந்தார். இதன் பின் தனுஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீடு அருகே குழந்தைக்கு ஒரு அடி உயரச் சிலை எழுப்பி கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி தனுஜாவின் சிலை எடுத்து கோவில் ஒன்றைக் கட்டியுள்ளனர். இதையடுத்து ஆண்டு தோறும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து சித்திரை மாதம் பால்குடம் மற்றும் பூக்குழி இறங்கும் விழா நடத்தி வருகின்றனர்.

இதன்படி இந்த ஆண்டும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருவிழா எடுத்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த மகளுக்குப் பெற்றோர் கோவில் கட்டி ஆண்டு தோறும் திருவிழா எடுத்து வருவது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இளைஞர்களைக் காவு வாங்கும் செல்ஃபி.. தண்டவாளத்தில் நின்று மகிழ்ச்சியாக செல்ஃபி எடுத்த மாணவி பரிதாப பலி!