Tamilnadu

மயிலை தம்பதி கொலை வழக்கில் வேறு எவருக்கெல்லாம் தொடர்பு? - போலிஸார் தெரிவித்த அண்மைத் தகவல்கள் என்ன?

மயிலாப்பூர் ஐடி கம்பெனி அதிபர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதாவை கொலை வழக்கில் இரண்டு பேரைத் தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஐடி கம்பெனி அதிபர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகிய இருவரும் அமெரிக்காவில் இருந்து கடந்த 7ஆம் தேதி சென்னைக்கு வீடு திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து அவர்களை அழைத்து வந்த அவரது கார் ஓட்டுநர் லால் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி ராய் ஆகிய இருவரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்தனர்.

வீட்டில் இருந்த எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வைர நகைகளை கொள்ளையடித்து விட்டு ஆந்திரா சென்றவர்களை, அம்மாநில போலிஸார் உதவியுடன் தமிழக போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் இருவரையும் கடந்த வெள்ளிக்கிழமை 5 நாள் போலிஸ் காவலில் விசாரிக்க மயிலாப்பூர் போலிஸாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்று , இருவரிடமும் , கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பிய வழியான அடையார் திருவான்மியூர் சூளைமேடு கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்கும் நேரில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

Also Read: “2 மாதத்திற்கு முன்பே சதி திட்டம்.. பண்ணை வீட்டு கதவில் மின்சாரம்”: மயிலாப்பூர் தம்பதி கொலையில் ‘பகீர்’ !

இதேபோன்று பூஞ்சேரியில் உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்துச்சென்று, நேபாளத்தில் இருந்து நேற்று சென்னை வந்த லால் கிருஷ்ணாவின் தாய் தந்தை ஆகியோரிடமும், லால் கிருஷ்ணாவின் முன்னிலையில் விசாரணை நடத்தினர்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலையில் லால் கிருஷ்ணா மற்றும் ரவி ராயை தவிர வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்பது போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்றாவது நாளாக விசாரணையை இருவரிடம் போலீஸார் நடத்தி வருகின்றனர்.

Also Read: 8-வது மாடி ஜன்னலில் தொங்கிய 3 வயது குழந்தை.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ஹீரோ - திக் திக் வீடியோ!