Tamilnadu

ஒரே இரவில் 24.5 கிலோ கஞ்சா பறிமுதல்: அதிரடியாக களமாடிய சென்னை போலிஸ்.. வடமாநிலத்தவர்கள் சிக்கியது எப்படி?

சென்னை வேளச்சேரி நேரு நகர் மதியழகன் தெருவில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்கள் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலிஸார், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மாசுக்மியா (24), ஜாகிர் உசேன் (23), அனோவர் உசேன் (24), ஆகிய 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 10 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல ஓ.எம்.ஆர் சாலை துரைப்பாக்கம் சுங்கச்சாவடி அருகே இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் சுங்கச்சாவடி அருகே இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதிகாலை சுமார் 03.00 மணியளவில், துரைப்பாக்கம், 200 அடி சாலை சுங்கச்சாவடி அருகே கஞ்சா வைத்திருந்த சந்தன்தாஸ் (31), சுமன் தேப்நாத் (23), அபுல்காசிம் (46), சுதீப் தேப்நாத் (30), ரபீந்திரா தேப்நாத் (34), ஆகிய 5 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 14.5 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் இவர்கள் அனைவரும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் பிற மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து வேளச்சேரி மற்றும் துரைப்பாக்கம் சுற்றி விற்பணையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

பின்னர் பிடிபட்ட குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய மூதாட்டி: பக்குவமாக பிடித்துச்சென்ற வனத்துறை!