Tamilnadu

“திருமண மண்டபத்தில் அறுந்து விழுந்த ‘லிப்ட்’.. தலை நசுங்கி 11ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி”: 3 பேர் கைது !

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண மண்டபத்தின் இரண்டாவது தளத்தில், நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது.

இதனால், கேட்டரிங் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் கீழே இருந்த உணவுகளை லிப்ட் மூலம் இரண்டாவது தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது திடீரென லிப்ட் அறுந்து விழுந்துள்ளது. இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு உடனே போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் லிப்டில் சிக்கியவர்களை மீட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரது உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த 2 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த மாணவன் குறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த சீத்தல் என்பதும் இவர் 11ம் வகுப்பு படித்துக்கொண்டு, கேட்டரிங் சர்வீஸ் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து திருமண மண்டப உரிமையாளர் ஜெயபிரியா, மேனேஜர் திருநாவுக்கரசு, சூப்பர்வைசர் வெங்கடேசன், லிப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகிய 4 பேர் வழக்குப்பதிவு செய்த நிலையில், 3 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பிறந்த நாளில் தற்கொலை செய்து கொண்ட இளம் நடிகை.. கணவரிடம் போலிஸ் விசாரணை” : கேரளாவில் நடந்த சோகம்!