Tamilnadu

மகனின் கடனுக்கு தாய் கணக்கில் கை வைத்த எஸ்.பி.ஐ.. திருவாரூர் நுகர்வோர் ஆணையம் பிறப்பித்த அதிரடி ஆணை!

திருவாரூர் மாவட்டம் மாங்குடி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணவனை இழந்த சங்கர பார்வதி (79). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். கடந்த 2013 ஆம் ஆண்டு இவரது வங்கி கணக்கில் இருந்து மகன் பெற்ற கடனுக்காக ரூ.5 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சங்கர பார்வதி திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். அப்போது ஆணையத்தின் உத்தரவின் பேரில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை மீண்டும் சங்கர பார்வதி வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இந்நிலையில் சங்கர பார்வதியின் வங்கி கணக்கில் மீண்டும் 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.35 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் சங்கர பார்வதி கேட்டபோது, அதிகாரிகள் உரிய பதிலளிக்க வில்லை.

இதையடுத்து மீண்டும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, மனுதாரர் சங்கர பார்வதி வங்கி கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.35 ஆயிரத்தை ஒரு மாதத்திற்குள் வரவு வைக்க பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டார்.

மேலும் வழக்கு செலவுத் தொகை ரூ.3 ஆயிரத்தை திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் சட்டப் பணிகள் வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவிட்டார்.

Also Read: “சாப்பிட காசு கேட்ட 6 வயது சிறுவன் கழுத்து நெரித்து கொலை” - மத்திய பிரதேச காவலர் வெறிச்செயல் !