Tamilnadu

”போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு”.. அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்தம் குறித்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தை, போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மைய்யத்தில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 66 போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் பேச்சுவார்த்தைக்குபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர்,"தொழிற்சங்கம் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. போக்குவரத்துத்துறையில் பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்படும்.

கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ. 300 பேட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் இலவச பேருந்தில் பணி செய்பவர்களுக்கு கூடுதலாக பேட்டா வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பணியாளர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு 15 படிகளை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பணி காலங்களை ஆய்வு செய்து கணக்கீட்டு அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதை முடிவு செய்து அறிவிக்கப்படும்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு 8% ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 5% ஊதிய உயர்வு வழங்கப்படும். பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் பேருந்துகள் கூடுதலாக ஆக்கப்பட்டு உள்ளதே தவிர குறைக்கவில்லை. பேருந்தில் இலவசமாக பயணிக்கும் பெண்கள் எண்ணிக்கை 61% ஆக உயர்ந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: “வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த தொழிற்சாலைக்கும் அனுமதி கிடையாது”: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!