Tamilnadu

வெளிநாட்டில் வேலை; லட்சக்கணக்கில் காசு வாங்கி அபேஸ்செய்த கில்லாடி லேடீஸ்: தாயும் மகளும் சிக்கியது எப்படி?

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல பேரை ஏமாற்றி லட்சக் கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு அமெரிக்கா தப்பிச் செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் வைத்து தாய் மகளை கைது செய்த போலிஸார்.

சென்னை வேளச்சேரி, பாரதி நகர், பரணி தெருவை சேர்ந்தவர் தன்ஷிகா(34), இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர், வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம் என எண்ணி தனது நண்பர் மூலம் கோயம்பேட்டில் உள்ள (Assyst Career Generating Pvt Ltd) என்ற நிறுவனத்தை நேரில் சென்று அணுகியுள்ளார்.

அங்கு கிளீனா கிரியேட்டர் (29), மற்றும் அவரது அம்மா அனிதா கிரியேட்டர் (59), நல்ல விதமாக பேசி 2,50,000 லட்ச ரூபாய் பணத்தை பெற்று போர்ச்சுக்கல் நாட்டிற்கு அனுப்புவதாக கூறியுள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்தனர். நெருக்கடி கொடுத்த போது கொஞ்சம் கொஞ்சமாக 11 லட்சம் வரை திரும்ப தந்து விட்டனர். ஒரு கட்டத்தில் செல்போன் எண்ணை அணைத்து வைத்து விட்டனர், அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இது தொடர்பாக 22-12-2021 அன்று வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாததால் தன்ஷிகா, அடையார் துணை ஆணையர் மகேந்திரன் அவர்களை கடந்த மாதம் அணுகினார். அவர் வழக்குப்பதிவு செய்ய உத்தவிட்டு, லுக் அவுட் நோட்டிஸும் வழங்கினார்.

இன்று கிளீனா மற்றும் அவரது தாய் அனிதா இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். அமெரிக்கா செல்லவிருந்த கிளீனாவை அவரது தாய் வழியனுப்ப சென்றிருந்தார். அப்போது லுக் அவுட் நோட்டிஸின் அடிப்படையில் அவர்களை பிடித்து வேளச்சேரி போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இருவரையும் கைது செய்த போலிஸார் விசாரித்ததில் இவர்கள் இது போல் பலபேரை ஏமாற்றி கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் இருவரையும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Also Read: இன்ஸ்டாவில் காதலிக்கு மெசேஜ் அனுப்பியதால் ஆத்திரம்.. பீர் பாட்டிலால் இளைஞனை குத்திய காதலனுக்கு காப்பு!