Tamilnadu

“வயதான தம்பதி கொலை : 50Kg நகை, கோடிக்கணக்கில் பணம் கொள்ளை”.. துப்பு துலங்கியது எப்படி? - ஷாக் ரிப்போர்ட்!

சென்னை மயிலாப்பூர் துவகாரா மகாலட்சுமி தெரு பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதி ஸ்ரீகாந்த் - அனுராதா. இவர்களின் மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். இதனிடையே கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள தனது மகள் சுனந்தாவிற்கு பிரசவம் என்பதால் இருவரும் அமெரிக்காச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக, ஶ்ரீகாந்த், அனுராதா தம்பதியினா் சென்னை திரும்பினா். இந்த வயதான தம்பதியை மயிலாப்பூா் வீட்டிற்கு அழைத்து செல்ல, அவா்களுடைய காா் டிரைவா் கிருஷ்ணா என்பவர், காருடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து இருவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நாடு திரும்பிய பெற்றோரிடம் பேசுவதற்காக அமெரிக்காவில் உள்ள மகள் சுனந்தா செல்போனுக்கு தொடர்புக்கொண்டுள்ளார். ஆனால் இருவரின் செல்போனும் ‘ஸ்விட்ச் ஆப்’ ஆக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சுனந்தா, தனது உறவினரான இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்பவரை தொடர்புக்கொண்டு நேரில் சென்று பார்க்கும் படி கூறியுள்ளார்.

இதனையடுத்து திவ்யா தனது கணவர் ரமேஷூடன் சென்று 12.30 மணியளிவில் தம்பதியினா் வீட்டிற்குச் சென்றபோது வீடு பூட்டி இருந்தது. இதனையடுத்து சுனந்தா அமெரிக்காவில் இருந்து அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டு இதுகுறித்து கூறியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், விசாரணை நடத்தியதில், அவர்களின் வீட்டின் பின்புறத்தில் தங்கி பணியாற்றி வந்த நேபாளம் நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணா என்ற டிரைவரை தேடினர். மேலும் இந்த வழக்கில் டிரைவர் கிருஷ்ணா மீது சந்தேகம் வலுத்ததால், போலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய முயன்றனர்.

ஆனால் தப்பித்துச் சென்றதாக கூறப்பட்ட நிலையில், ஆந்திரா அருகே போலிஸார் அவரை மடக்கிப்பிடித்தனர். மேலும் அவர்கள் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்த போலிஸார், கிருஷ்ணாவுக்கு உதவிய அவரது நண்பர் ரவி ராய் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து, போலிஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

அந்த விசாரணையில், கிருஷ்ணா ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா இருவரையும் மயிலாப்பூர் வீட்டிலேயே கொலை செய்து, கிழக்கு கடற்கரை சாலை, நெமிலிச்சேரியில் உள்ள ஸ்ரீகாந்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் புதைத்ததும் தெரிய வந்தது. மேலும் இந்த கொலை வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடிக்க நடந்ததாக போலிஸின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னை கூடுதல் ஆணையர் கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வயதான தம்பதியை தனித்தனி அறையில் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். இதில் அனுராதா வீட்டின் மேல்மாடியிலும், ஸ்ரீகாந்த் கீழ் அறையில் இறந்துகிடந்ததாக தெரியவதுள்ளது.

சமீபத்தில் ஸ்ரீகாந்த் வாகனத்தில் வரும் போது மிகப்பெரிய தொகை வரவேண்டியுள்ளதைப் பற்றி, யாருடனே போனில் பேசிவந்துள்ளார். இந்நிலையில் அந்த பணத்தைக் கொள்ளையடிக்கவே ஊரில் இருந்து தம்பதியினர் வரும் வரை கிருஷ்ணா காத்திருந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு அவரது நண்பர் ரவி ராய் திட்டம்போட்டுக்கொடுத்து, உதவியும் செய்துள்ளார். இதனிடையே இன்று வீட்டிற்கு வந்த தம்பதியை கிருஷ்ணா அடித்துக்கொலை செய்து அவர்களிடம் இருந்து சாவிக்கொத்தை எடுத்துக்கொண்டு வீட்டில் பிரோவில் திறந்துள்ளனர். அப்போது பணம் குறைவாக இருந்துள்ளது.

அதேசமயம் ஆயிரம் சவரன் நகைகள் இருந்துள்ளது. அதாவது 8 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி நகைகள் இருந்துள்ளது. அவற்றை அங்கிருந்து பையில் கட்டி எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் உடலை எடுத்துச் சென்று அவர்களின் பண்ணை வீட்டிலேயே புதைத்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்துள்ளனர். இதனையடுத்து காரை எடுத்துச் சென்ற கிருஷ்ணாவை ஆந்திர போலிஸார் உதவியுடன் இரண்டு பேரையும் போலிஸார் கைது செய்துள்னர். வழக்குப் பதிவு செய்து 5 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலிஸார் கைது செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஆடிட்டர் தம்பதி கடத்தி கொலை: 5 மணிநேரத்தில் கொலையாளிகளை மடக்கி பிடித்த போலிஸ்.. விசாரணையில் பகீர் தகவல்!