Tamilnadu

’பாத்துக்க முடியல..’ : சொந்த பாட்டியை பெட்ரோல் ஊற்றி எரித்த அக்கா, தங்கை; நெல்லை அருகே பயங்கரம்!

சொந்த பாட்டியை பராமரிக்க முடியாததால் பேத்திகளே எரித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நெல்லை அருகே அரங்கேறியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்தான் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

ஆதம் நகர் எதிரே கடந்த மே 3ம் தேதி சாலையோரம் மூதாட்டி ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கண்ட பொது மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

இதனையடுத்து உடனடியாக விரைந்துச் சென்று சடலத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து, இறந்த மூதாட்டி யார் என விசாரணை முடுக்கிவிட்டனர்.

அதில், உயிரிழந்தது பழைய பேட்டையை அடுத்து கிருஷ்ணப்பேரியைச் சேர்ந்த சுப்பம்மாள் (90) என்றும், இவரை மகள் வழி பேத்திகளான மேரி (38), மாரியம்மாள் (30) ஆகிய இருவருமே பராமரித்து வந்திருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு செக்கடி பகுதியைச் சேர்ந்த மேரி, கிருஷ்ணபேரியில் உள்ள மாரியம்மாள் வீட்டில் மூதாட்டி சுப்பாம்மாளை விட்டுவிட்டு சென்றிருக்கிறார். பின்னர் மாரியம்மாள் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

ஆனால் பாட்டியை தொடர்ந்து பராமரிக்க முடியாமல் போனதால் அக்காளும் தங்கையும் சேர்ந்து மூதாட்டியை கொல்ல முடிவெடுத்து அவரை ஆட்டோவில் ஏற்றி ஆதம் நகர் அருகே சென்றிருக்கிறார்கள்.

அங்கு வைத்து மூதாட்டி சுப்பம்மாள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு, மீண்டும் ஆட்டோவை வரவைத்து அதில் ஏறி சென்றிருக்கிறார்கள்.

இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேரி, மாரியம்மாளை கைது செய்த நெல்லை போலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: “ரயில் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டை பதுக்கி வைத்த ரவுடி கும்பல்” : பகீர் கொலை திட்டம் - பின்னணி என்ன?