Tamilnadu

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. இளைஞனை நடுரோட்டில் குத்திக்கொன்ற பெண் வீட்டார்: ஹைதராபாத்தில் ஆணவக்கொலை!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பில்லாபுரம் நாகராஜ். இவர் அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று நாகராஜ் வேலை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரை வழிமறைத்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாங்கள் எடுத்து வந்திருந்த கத்தியால் அவரை சரமாரியாகக் குத்திக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் உயிரிழந்த நாகராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது, தனது மகள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் அவரது கணவரைப் பெண் வீட்டாரின் குடும்பத்தினரே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுல்தானாவின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை போலிஸார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத்தில் ஆணவக்கொலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கட்டிய மனைவியை துண்டால் கழுத்தை இறுக்கி கொன்ற கணவன்: பயந்து ஓட்டம் பிடித்த போதை ஆசாமி சிக்கியது எப்படி?