Tamilnadu
“வீடியோ காலில் கொலை செய்ய ஐடியா கொடுத்த தம்பதி” : இளைஞர் கொலையில் ‘பகீர்’ வாக்குமூலம் - சிக்கியது எப்படி?
சென்னை ராயப்பேட்டையில் மெட்ராஸ் கேர் சென்டர் என்ற போதை மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜி என்பர் நேற்று சந்தேகமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி கலா, அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், அண்ணாசாலை போலிஸார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்களை அழைத்து விசாரணை நடத்திய போது, ராஜியை கட்டையால் தாக்கி, சுடு தண்ணீர் ஊற்றி கொடுமைப்படுத்தியதால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலிஸார் இதை கொலை வழக்காகப் பதிவு செய்து போதை மறுவாழ்வு மைய ஊழியர்களான யுவராஜ், கேசவன், செல்வமணி, சரவணன், சதீஷ், மோகன், பார்த்தசாரதி ஆகிய 7 பேரை கைது செய்தனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரியை போலிஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மெட்ராஸ் கேர் சென்டர் உரிமையாளரான கார்த்திகேயன் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதும், அவரது மனைவி லோகேஸ்வரி பெயரில் மாநில மனநல அமைப்பிடம் அனுமதி பெறாமல் மெட்ராஸ் கேர் சென்டர் என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வருவதும் தெரியவந்தது.
இந்த மையத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட நபர்கள் மையத்தில் சிகிச்சை பெற்று வருவதும், சிகிச்சைக்காக ரூ. 20 ஆயிரம் முதல் கட்டணம் வசூல் செய்து வருவதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவரின் குடும்பத்தினரிடம் இங்கு அடித்து கொடுமைப்படுத்துவதாக ராஜி தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த குடும்பத்தினர் அந்த நபரை வேறு மையத்திற்கு சேர்த்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த உரிமையாளர் கார்த்திகேயன் ராஜி மீது கடும் கோபத்திலிருந்து வந்துள்ளார். இந்நிலையில் தான் உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி ஆகியோர் ஊழியர்களுக்கு வீடியோ காலில் பேசி, உடல் முழுவதும் தாக்கி ராஜியை கொலை செய்ய சொன்னதாக கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!