Tamilnadu

“சிகரெட் வடிவிலும், ஊசி சிரஞ்சிலும் சாக்லேட் நிரப்பி விற்பனை” : அதிகாரிகள் ரெய்டு; ஆடிப்போன உரிமையாளர் !

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து உணவகங்களில் நடக்கும் மோசடிகளில், தனி கவனம் செலுத்தி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் உணவுப்பாதுகாப்புத் துறையினர். குறிப்பாக உணவங்கள், குளிர்பான நிறுவனங்களில் நச்சுப்பொருள் கலந்து உணவு விற்கப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் சிகரெட் வடிவிலும், ஊசி போடும் சிரஞ்சில் சாக்லேட் நிரப்பி விற்பனை செய்த இரண்டு நிறுவனங்களை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு சிகரெட் வடிவிலும், ஊசி போடும் சிரஞ்சில் சாக்லேட் நிரப்பி விற்பனை செய்வதாக உணவுப்பாதுகாப்புத் துறை மற்றும் போலிஸாருக்கு புகார் வந்துள்ளது.

இதனையடுத்து மதுரை செல்லூர் ஜெய்ஹிந்துபுரத்தில் சிகரெட் வடிவில் சாக்லேட் தயாரித்து விற்பனை செய்து வந்த இரண்டு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் விற்பனைக்காக ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஊசி போடும் சிரஞ்சி சாக்லெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள், குழந்தைகளை தவறான பாதைக்கு திசை திருப்பும் வகையிலான இதுபோன்ற சாக்லேட்டுகளை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: வலி நிவாரணி பேரில் போதை மாத்திரை விற்பனை: களத்தில் இறங்கி ரெய்டு விட்ட சென்னை போலிஸ்.. நால்வருக்கு காப்பு