Tamilnadu

கழுத்தை நெரித்து மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவன்... விசாரணையில் அதிர்ச்சி!

தேனி மாவட்டம் சின்னமனூர் அழகர்சாமி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவரது மனைவி பிரபா. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக மனைவி பிரபாவின் நடத்தையில் அழகர்சாமிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு பிரபா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தைக்கு ராஜேஷ்குமார் தகவல் கூறியுள்ளார். மகளின் இறப்புச் செய்தி கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து, மகளின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, பிரபாவின் உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனையில் பிரபா தூக்க மாத்திரை சாப்பிட்டு இறக்கவில்லை என்றும் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதற்கான அடையாளம் இருப்பதை உறுதிசெய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலிஸார் ராஜேஷ்குமாரை அழைத்து விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

மனைவி மீது சந்தேகம் அடைந்ததால் சம்பவத்தன்று, பிரபாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் கொடுத்ததாக போலிஸாரிடம் ராஜேஷ்குமார் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ ஓட்டுநர் கொலை.. சடலத்துடன் செல்ஃபி எடுத்த ரவுடி கும்பல்” : பின்னணி என்ன?