Tamilnadu

வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை.. அதிர்ந்துபோன உரிமையாளர்.. அச்சத்தில் கோத்தகிரி மக்கள்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று கவ்விச்சென்றுள்ளது.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் சாலையில் புதூர் பகுதியில் அமைந்துள்ள முருகன் என்பவர் வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் தொடர்ந்து குரைத்தபடி இருந்துள்ளது.

திடீரென நாயின் சத்தம் நிற்கவே, சந்தேகமடைந்த முருகன் ஜன்னல் வழியாக வீட்டின் வெளியே பார்த்தபோது வாசலில் இரத்தமாக இருப்பதைத் கண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதித்து பார்த்தாா்.

அப்போது குடியிருப்புக்குள் சிறுத்தைப் புகுந்து வளர்ப்பு நாயைக் கவ்விச் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து அவர் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் கோத்தகிரி வனத்துறையினர் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில், குடியிருப்புப் பகுதிக்குள் உலா வரும் சிறுத்தையால் அச்சம் அடைந்து உள்ளோம். எனவே குடியிருப்புக்குள் புகும் அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

Also Read: பூனையா? சிறுத்தையா? - குழம்பிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள்.. கூடலூரில் பரபரப்பு!