Tamilnadu

“தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ ஓட்டுநர் கொலை.. சடலத்துடன் செல்ஃபி எடுத்த ரவுடி கும்பல்” : பின்னணி என்ன?

மணலி புது நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (32), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கீர்த்தனா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது . இந்தநிலையில் நேற்று மாலை ரவிச்சந்திரன் மணலி புதுநகர் எம்ஆர்எப் குவார்ட்டர்ஸ் அருகே கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மணலி புதுநகர் போலிஸாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக மணலி புதுநகரைச் சேர்ந்த ஆறுவிரல் மதன், குத்தா, பரத், பப்லு ஆகிய நான்கு பேரை போலிஸார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போதையில் இருந்த ரவுடி ஆறுவிரல் மதனுக்கும் ரவிச்சந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக நேற்று மதியம் மதன் தனது கூட்டாளிகள் மணலி புதுநகரைச் சேர்ந்த குத்தா, பரத், பப்லு ஆகிய நான்கு பேர் சேர்ந்து மது அருந்தலாம் என்று மணலி புதுநகர் எம்.ஆர்.எப் குவார்ட்டர்ஸ் பகுதிக்கு ரவிசந்திரனை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் போதை தலைக்கு ஏறியதும் கத்தியால் சரமாரியாக தலையில் வெட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்த ஒரு பாறாங்கல்லை எடுத்து ரவிச்சந்திரன் தலையில் போட்டு துடிதுடிக்க கொலை செய்துள்ளனர்.

அதன்பின்னர் ரவிச்சந்திரன் இறந்ததும் மதன் அதை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளான். போலிஸார் செல்போன் நம்பரை வைத்து மதன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் ஏற்கனவே கொலை முயற்சி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விபரீதமான கண்ணாமூச்சி விளையாட்டு.. ஐஸ் க்ரீம் பெட்டியில் புகுந்த 2 சிறுமிகள் பலி; கர்நாடகாவில் சோகம்!